Sunday 19 February 2012

அம்புலி - அரை நிலா ...

 
 
 
ஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான " ஓர் இரவு " மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்குனர்கள் என்ற இரண்டை தவிர படத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என்பதால் பெரிதாய் ஏமாற்றவில்லை என்று சொல்லலாம்...
 
கதை எழுபதுகளில் நடக்கிறது...கல்லூரி மாணவனான அமுதன் ( அஜய் ) விடுமுறை நாட்களில் தன் காதலி பூங்காவனத்தை ( சனம் ) சந்திப்பதற்கு ஏதுவாக தன் நண்பன் பாரிவேந்தனுடன் ( ஸ்ரீஜித் ) கல்லூரியிலேயே தங்கி விடுகிறான் ... கல்லூரி வாட்ச்மேனாக வேலை பார்க்கும் வேந்தனின் அப்பா வேதகிரி ( தம்பி ராமையா ) விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் தன் காதலியை பார்க்க சோளக்காடு வழியாக செல்லும் அமுதன் அங்கு ஏதொ ஒரு தீய சக்தி தன்னை துரத்துவது போல உணர்கிறான்...
 
தன்னை துரத்தியது அம்புலி ( கோபிநாத் ) என்ற கொடிய மிருகம் (மனிதன்) என்பதும் , அம்புலி பூமானந்திபுர கிராமத்து மக்களை கொன்று தின்றதால் யாரும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வதில்லை என்பதும் அமுதனுக்கு தெரிய வருகிறது ... அம்புலி உண்மையா ? கட்டுக்கதையா ? என்பதை அறியும் ஆவலுடன் அமுதனும் , அவன் நண்பன் வேந்தனும் எடுக்கும் முயற்சிகளை முடிந்தவரை திடுக் திடுக் திரைக்கதையால் சொல்லியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ( ஹரிஷங்கர், ஹரிஷ் நாராயணன் )
 
புதுமுக நடிகர்களில் அஜய் , சனம் இருவரும் கவர்கிறார்கள் ...மிகுந்த தைரியசாலியாக காட்டப்படும் ஸ்ரிஜித்திற்கு அதற்கேற்ற உடல்மொழியோ , முக பாவனைகளோ இல்லை , இவருடைய ஜோடியாக நடித்தவர் பற்றி சொல்வதற்கும் பெரிதாக ஏதுமில்லை...

பார்த்திபன் சில சீன்கள் வந்தாலும் அலட்டாமல் கச்சிதமாக நடித்திருக்கிறார்... இவர் தான் அம்புலியோ என சந்தேகப்பட வைத்து பின்னர் அம்புலியின் அண்ணன் செங்கோடன் என வைக்கப்படும் ட்விஸ்டுகள் லாஜிக் மீறல்களாக இருந்தாலும் திரைக்கதையை சுவாரசியப்படுத்த உதவுகின்றன ... வாட்ச்மேனாக தம்பி ராமையாவும் , கர்ப்பிணி பெண்ணாக ( தொடந்து இதே கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்ப்பது நலம் ) உமா ரியாசும் , நாத்திகவாதியாக ஜெகனும் இயல்பாக பொருந்துகிறார்கள்...
 
பின்னணி இசையும் , ஒளிப்பதிவும் திகில் படத்திற்கு உண்டான உணர்வை கொடுக்கின்றன ... நான்கு பேர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும் முதல் பாடலும் , கடைசி பாடலும் மட்டுமே நினைவில் நிற்கின்றன...வசனமே இல்லாத முதல் பத்து நிமிடங்களில் கேமரா கோணங்களாலும், பின்னணி இசையாலும் நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் இடைவேளை வரை தொய்வில்லாமல் ( சில பாடல்களை தவிர்த்து ) போகிறது...
 
 
அம்புலி யார் என்பதை கிராமத்து மக்களின் வாயிலாகவும் , அதே நேரத்தில் மருத்துவ ரீதியாகவும் சொன்ன முறையில் வித்தியாசம் காட்டுகிறார்கள் ... அடுத்து நடக்கவிருப்பதை ஓரளவு யூகிக்க முடிந்தாலும் படத்தை கொண்டு சென்ற விதத்தை பாராட்டலாம் ... " நம்பிக்கையோ , மூட நம்பிக்கையோ நம்ம உசுர காப்பாத்தற எதையும் நாம நம்பித்தான் ஆகணும் " போன்ற சில வசனங்கள் ரசிக்க வைக்கின்றன , ஆனால் ஜெகனை கருப்பு சட்டை போட்டுக்கொண்டு மேடைபேச்சு போல பேசவிட்டதை தவிர்த்திருக்கலாம் ...
 
அம்புலியை காட்டாமலேயே திரைக்கதையை எதிர்பார்ப்புடன் நகர்த்தியிருந்தாலும் ஓரளவுக்கு மேல் அது சலிப்பை தருகிறது , அதிலும் அம்புலி வந்த சிறிது நேரத்திலேயே சப்பென்று ஆகி விடுகிறது ... ஊரே சோளக்காட்டுக்குள் செல்ல பயப்படும் போது , ஹீரோயின் மட்டும் க்ளைமாக்ஸ் நெருங்கி விட்டதாலோ என்னவோ ஏதோ பிக்னிக் செல்வது போல அங்கே செல்கிறார் ...
 
 
பார்த்திபன் கதாபாத்திரத்தின் குழப்பங்கள் , அதிலும் அம்புலியை கொல்வதற்காக காட்டுக்குள் தங்கியிருப்பவர் ஏன் இத்தனை நாள் அதை செய்யவில்லை , அம்புலி ஏன் அவரை ஒன்றும் செய்யவில்லை , க்ளைமாக்ஸ்இல் அம்புலியை கொல்ல செல்லும் போது தன்னுடன் ஏன் தேவையில்லாமல் இரண்டு பெண்களையும் அழைத்து செல்ல வேண்டும் - இது போன்ற கேள்விகள் ,
 
பொதுவாக குழந்தைகளை மனதில் வைத்து தான் 3 டி படம் எடுப்பார்கள் , இப்படத்தில் அது போன்ற சீன்கள் எதுவும் இல்லை , அதே போல சில சீன்களை தவிர மயிர்கூச்செறியும் திகில் காட்சிகளும் நிறைய இல்லை, எனவே வெறும் விளம்பர உக்திக்காக தான் 3 டியில் எடுத்தார்களோ என எண்ண வைக்கும் படியான கதை , இது போன்ற குறைகள் அம்புலியை இருட்டுக்குள் வைக்கின்றன ...
 
( பின் குறிப்பு ) படத்தை 3 டி தொழில்நுட்பம் முற்றிலும் அமைந்த திரையரங்குகளில் மட்டும் பார்க்கவும் ...
 
ஸ்கோர் கார்ட் : 41

No comments:

Post a Comment

Popular Posts